Monday, March 14, 2022

5 கவிதைகள்

 

 

 

உள்ளங்கையில் உள்ளுணர்வு

 

மருதானியிட்டுச் சிவந்த

உள்ளங்கையைக் காட்டினாள் மகள்...

 

நல்லா இருக்கா வாப்பா...

அழகாய் இருக்குடா மகளே...

 

கலீரெனச்  சிரித்தோடுகிறாள் மகள்....

 

உள்ளங்கை வட்டத்தில் நீ

உணர்த்தியது என்ன மகளே..

 

சுற்றி நீ வைத்த..அந்தச்

சின்ன வட்டங்கள் சொன்ன

செய்திகள் என்ன மகளே..

 

தொப்பி போட்ட உன் விரல்கள்

தொட்டுக்காட்டியது என்ன மகளே

 

விரல் கணுக்களின் கோடுகள்

விண்ட கதை அறிவேன் மகளே..

 

வாழ்வொன்று தேடித்தர

வக்கற்ற இந்த

 

வாப்பாவை மன்னித்து விடு மகளே....

 

௦௦

 

நாளைக்குப் பெருநாள்

 

 

வானம்

விண்மீன் ஜரிகை உடுத்தி

பிறைச் சிமிக்கியும் அணிந்தது

 

குரோட்டன்கள்

மருதாணிக் கைகளை

விரித்துக் காட்டிச் சிரித்தன

 

வண்ணத்துப் பூச்சிகள் கூட

வர்ணச் செட்டைகள் மாற்றிப்

பறந்து திரிந்தன.

 

என் மகளும்

புதிதாகத்

தைத்துக் கொண்டிருந்தாள்

 

தாவணியில்

பழைய

பொத்தல்களை....

 

00

:

 

 

ஏக்கம்

 

முறைதவறிச் செய்த பாவ

மீட்சி பெறுவதெக்காலம்

 

கறை நீங்கி கல்பு குளிர்ந்து

களித்தாடுவது எக்காலம்

 

சிறை மீண்டு சிரம் நிமிர்த்திச்

சிறகடிப்பதுவும் எக்காலம்

 

குறையறிவு நீங்கி நான்

குன்றென நிமிர்வதெக்காலம்

 

பிறைவானம் கடந்து மேலேறிப்

பிரயாணம் போவதெக் காலம்..

 

அறைமுழுவதும் அகல் ஏற்றி

ஆனந்திப்பதுவும் எக்காலம்

 

மறையோதி மனம் மகிழ்ந்து

மலர்வதுவுமெக்காலம்..

 

நிறைகுருநாதர் கரம்பற்றி

நின்றொளிர்வதெக்காலம்.

 

இறைவர்ணத்தில் தோய்ந்து நான்

இன்புறுவதுவும் எக்காலம்.?

0

தீரன்..

[8:19 pm, 08/02/2022] RMN\

 

 

: எழுதித் தீராக் கவிதை

➖➖➖➖➖➖➖➖

 

எப்படி எழுத

இந்தக் கவிதையை..

 

தலையில் எழுதியதைத்

தாளில் எழுதுவதா..

அன்றிச்

சுழியில் எழுதியதை

மொழியில் எழுதுவதோ..?

 

ஆழியில் எழுதிய

அரிச்சுவடியை

ஆர்தான் சொல்ல முடியும்..

ஆதியில் எழுதிய

அகரத்தை

ஆருக்குச் சொல்ல இயலும்..

 

விரல் எழுதிய வரியை

விதி  ஒப்புக்கொள்ளுமோ...

 

எழுதிச்செல்லும்

விதியின் விரலில்

நழுவி விழுமோ

நமக்கான எழுத்து...

 

எப்படி எழுத

இந்தக் கவிதையை..?

0

5 கவிதைகள்

 

இரவில் நடமாடும் இரவு

 

 

இரவு இருளானதும்

எழுந்து விடுவேன்

 

 இரவில் நடமாடும்

இரவோடு

இரகசியம் பேசிக்கொண்டிருக்க

இது நல்ல நேரம்

இரவே உன்னை

இருளாக்கியது யாரோ..

 

கறுப்புப் போர்வையை

உதறி என்னை மூடிய இரவு

நீண்ட மௌனத்தில் ஆழ்ந்தது

இரவு முழுவதும்

இருவரும் பேசிக்கொள்ளவில்லை

 

இருள் விலகி

இரவு போக எழுந்தது

எனக்கு என்ன பதில்

என்றேன்

 

உண்மையில் நான்தான் ஒளி

என்னைப் பார்க்க

நீ சக்தி பெறவில்லை

 

 இருள் போய்விட்டது

ஒளி வந்தது

இருள் போகவில்லை

ஒளி வரவில்லை...

 

00

 

 

 

காலண்டரின் கடைசித் திகதி

 

 

வேடிக்கை மனிதன்தான்

நீ..

 

 இதோ

கட்டளைக்காக காத்திருக்கும் இஸ்ராபீலின்

வாயில் ஷூர்

 

ஒரு கணத்தில்,

உலகின் இறுதி நாளின்

திகதியைக்

கிழிப்பவன் வந்து விடக்கூடும்..

 

 வானம் பிளந்து

வரும்

வானவரை நீ காணும் போதில்

 

பஞ்சாய் பறந்து வரும்

மலைகளை

பார்த்து இரசிப்பாயோ...

 

 அன்றி

உதிர்ந்து விழும்

நட்சத்திரங்களை

பொறுக்கிக் கொண்டிருப்பாயோ

 

 தீ மூட்டப்படும் கடலில்

என்ன வேலை உனக்கு...

புவி அதிர்ந்து

புதைகுழிகள் திறக்கப்படும்போது

யார் யாரை வரவேற்க..?

 

போ..போ..

சுஜூதில் கிட...

 

00

 

எழு(த்)து

 

 

 

சுழியில் தொடங்கியதோர்

பேரெழுத்து...

 

அதன் பேர் தலையெழுத்து

பலருக்கு ஒற்றைச்சுழி

சிலருக்கு ரெட்டைச்சுழி

 

 தலையெழுத்தை

விதி

தலையில் எழுதியதாலா

அது தலைவிதி...

 

 தலையிலிருந்தாலும்

அது தொலையெழுத்து

வாசிக்க முடியாத

வலைப்பின்னல்

உருவமில்லாத உயிர் எழுத்து

 

மெய்தான்

மெய்யை எழுதும்

மெய்யெழுத்து

மெய்யை பொய்யாக்கும்

கையெழுத்து அது

 

 எழுதி முடித்துக்

கையெழுத்திட்டதும்

எழுதுகோலின்

மை உலர்ந்தது...

 

 எழுத்து

எழுந்து நடந்தது...

 

00

 

 

 

காலமான காலம்

 

 காலத்தின் மீது

காலமே சத்தியம் செய்கிறது

முக்காலமும் தற்காலமே

எக்காலமும் இக்காலமே என்கிறது

 

காலத்தை திட்ட வேண்டாம்

நானே காலமாக இருக்கிறேன்

நானே காலமாக இறக்கிறேன்

 

 காலத்துக்கு,

காலம் சொன்னது

காலத்துக்குக் காலம்

காலம் செல்வதும் நானே...

புதியதோர்

காலமாகப் பிறப்பதுவும் நானே

 

 ஆயின்

காலமானார் எனச் சொல்லாதீர்

அகால மரணம் எனவும் கூறாதீர்

காலம் எழுதுகிற கணக்கில்

கணக்கில்லாத காலங்கள் உண்டு..

 

 காலா காலமாய்

காலத்தை அளப்போரே வருக

கால நேரம் கணிக்கக்

காலமாணி  ஒன்று கொணர்க

 

 காலம் கடக்கப்

பாலம் உண்டா சொல்வீர்?

காலம் கடந்த புறாக்மட்டுமே

காலம் கடந்தும் வாழ்கிறது..

 

 காலாதி காலமாய்

காலாவதி ஆகாமல்

காலமாய் இருக்கும்

காலம் நான்...என உணர்வீர்.

 

 நானே

காலமானால் காலம் ஏது?

 

௦௦

 

 

இறை வர்ணத்தில் தோய்வீராக

 

 வெள்ளத்தில் தத்தளிப்போரே

நூஹின் கப்பலுக்குள் செல்க

 

பிர் அவ்னுக்கு அஞ்சுவோரே

மூஸாவுடன்

பிளவுண்ட

நைல்நதிக்குள் இறங்குக..

 

 நம்ரூத்தை எதிர்ப்போரே

இப்றாஹீமுடன்

நெருப்புக்குள் பாய்க....

 

 பிலாத்துவுக்கு பயந்தோரே

ஈசாவுடன்

வானுலகில் மறைக...

 

என்னை அழைக்காதீர்கள்

நான்

யூசூபின் அமைச்சரவைக்குச்

செல்லப் போவதுமில்லை

 

தாவூத்துடன் மலைகளுக்கு ஏறி

சங்கீதம் பாடப் போவதுமில்லை

 

 வர்ணங்களைப்

போர்த்திக் கொண்டிருக்கும்

பிரபஞ்ச வெளியில்

தோயப் போகிறேன்...

அங்கேயே

கரைந்து விடப் போகின்றேன்

 

 இனித்

திரும்பி வரமாட்டேன்..

 

00

Sunday, March 13, 2022

5 கவிதைகள்

வெளி "ஆகுக!"

"குன் " என்றதும்
முதலில் வெளியானது
"வெளி" யா?

வெளியானதால்தான்
"வெளி" என்றானதா.?
அமா எனும் இருளில் இருந்து
"வெளி"ச்சத்துக்கு வந்ததால்
அது பெருவெளி ஆனதோ..?

வெளியில் இருந்து கொண்டு
வெளியை காணுதல் கூடுமோ.?
வெளிக்கப்பாலும்
செல்லக் கப்பலும் உண்டோ..?

தீராவெளி தேடிச்
சிறு வெளிச்சம் கொளுத்தி ஒரு
மின்மினிப் பூச்சி
வெளிஇறங்கித் தேடும் போது
அதன்மீது
வெளி இரங்கிச் சொன்னது

முதலில்
வெளிமனதில் உள்ளதை
வெளியாக்கு..
பின்னர்
உள்மனதில்
அது வெளி ஆகும்.

00


பிரிதலின் நிலை


ஒளு செய்யும் போதே
ஓருயிர் பிரிவதுண்டு
தக்பீர் கட்டியதும்
தடாலென விழுந்து
தவித்துச் சில போவதுண்டு

ருக்குஹ் செய்த நிலையில் கூட
ரூஹு பிரிவதும் கண்கூடு.
நடு இருப்பில் வர
நல்லாத்மா கழன்று விழுவதுமுண்டு

எந்நிலையில்
எவர் உயிர்
எவ்விதம் பிரியுமோ
எவ்விடம் போகுமோ..

ஆயின்,
சுஜூதில் விழுந்து
சிரவணக்கம் செய்யும் போதென்
சீவன் போகச் செய்குவையோ..?

00


இடது கைப்பட்டோலை


ஒன்று விடாமல்
றகிப் அதித் வரைந்த வரலாறு
எப்படி வாசிக்க...

எத்தனை அத்தியாயங்கள்...
எத்தனை அநியாயங்கள்...

மீசானில் போடத்
தீமைத்தட்டு
தரையில் தட்டிற்று..

கதறிக் கத்திக்
குளறும் போதிலே..,
இழிந்த இந்த மானுடம்
தெரிந்தோ என்னவோ
மொழிந்திருந்த ஒரு கலிமாப்
பொழிந்திருந்த பக்கத்தைப்
போட்டதும்,

ஆ..
தீமைத்தட்டு உயர்ந்தது
நன்மைத்தட்டு தாழ்ந்தது
கருணையின் வாசல்
திறந்தது.

கடவுளின் தரிசனம் கிடைத்தது..

00

நிறுத்தற்குறி.

சிறகடித்துக் குதிக்கிறது
இந்தச் சொல்
என்னை எடுத்து ஒரு
கவிதை எழுதிக் கொள் என்று...

ஏற்கனவே
வண்ணத்துப் பூச்சியின்
இறக்கைகளில்
எழுதியவை எல்லாம்
எங்கோ பறந்து விட்டன..

நான் எழுதிய
வானத்தைச்சுருட்டி
காது குடைகிறேன்

அதில் எழுதிய
என் இள மைப்பேனா
உலர்ந்து விட்டது..

அறுபது பக்கம் வரை
என்னை வாசித்த அலுப்பில்
மூடி ஒரு
மயானத்தின் மூலையில்
தூக்கி எறியக்
காலமும் முடிவு செய்த பின்னே

இனியும்
எதை எழுத...
யார் வாசிக்க....?

00


ஒரத்த பெருமஹா நொக்கு



பகளியில அடுக்கின
தல வெத்தில போல
மொகம்வாய்ச்சிருக்கி ண்டு
என்ன நடப்புஹா நொக்கு

கொளுந்தண்டு போல
மூக்கு வளைஞ்சிருக்கே
அந்தக் கெப்பரு நொக்கு

கொட்டப்பாக்கு போல ரெண்டு
கண்ணும்...அது
வெட்டி வெட்டி முழிச்சா
பாக்குச் சீவல் போல இருக்கு
ண்டு ஒரத்த பெரும நொக்கு

சுண்ணாம்புட கலருள
பல்லு பளீரெண்டு
தொலங்குது ண்டு ஒரு எடுப்பு

சப்பித் துப்பின சாறு போல
செவத்த ஒதடு இருக்கி ண்டு
ஒரமா இருக்கி பெரும

கண்ணுல பொயில வெச்சிக்
கிறுகிருக்க வெக்கிறம்
ண்டு ஒரு தும்ரு

ஏலக்காயும் சேத்துச் சப்பினாப்போல
கமகமக்கிற வாயி
எல்லாஞ் சேர்ந்து
என்ன ஒரத்த
பெருமஹா நொக்கு

பொறு..பொறு
ஒருநாளக்கி ஒன்னச்
சப்பித் துப்புவன் பாரு...

00

Saturday, March 12, 2022

மிஹ்ராஜ்



உலகின் முதல் விண்வெளி வீரர்


பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

குன்னென்ற சொல்லாலே

குவலயங்கள் படைத்தளித்தானே ..வல்லவன்

எல்லாமுமாய் காட்சி தரும்

அவன் திருக் காட்சியை

என்னென்பேன்

அவன் பெரும் மாட்சியை

எப்படி உரைப்பேன்.

அவன் புகழ் ஓதுவோம் ...

அல்ஹம்துலில்லாஹ்.

00

அவன் அளித்த ஒரு திருத்தூதர்

விண்ணகம் விரைந்த

முதல் விண்வெளிவீரர்

பொன்னிகர் மேனியர்

பூமான் நபிகள் –எங்கள்

கண்மணி ரசூலே கரீம்

அன்னவர் மீதும்

அவர்தம் அடியார் கிளைஞர் மீதும்

எந்நாளும் உரைப்போம்

சலாம் சலவாத்...

௦௦

ஒளியின் கோட்டை விண்வெளி – அங்கு,

ஒளிதான் மொழியும் மொழியை..

ஒளியின் பின்னே இருள் – அதுவும்,

பேரொளியின் ஓர் அருள்.

வினாடிக்கு மூன்று இலட்சம் கிலோமீட்டரில்

விரையும் ஒளிக்கோட்டுக்கு

வேகத்தில் நிகரில்லை கண்டீர்

ஒளிர்பாதைக்கு வடிவில்லை

எனக் கொண்டீர்...



ஒளியின் உருவினர் மலக்குகள்..

விண்வெளியின் உயிரிகளும்

ஒளியின் படைப்புக்களே..

விண்வெளி ஏகிய

கண்மணி ரசூலும்

ஒளியின் ஒரு வடிவினர்



பேரொளியின் தூதுவர்..

நூர்ந்து விடாத-

‘நூர்’ முகம்மது...

இருளில் நூல் கோர்க்க அன்னை ஆயிஷா

ஊசியை நூலுடன் சேர்க்க..

ஒளி துலங்கிய அன்னவர்



வதன ஒளியில்

நூல் கோர்த்த நூர்முகம்-அது

ஒளிவார்த்த முகமது...

00

பேரொளியிலொரு நாட்டம் நடந்தது

பெருமானரைத் தம்மிடம் அழைக்கப்

பேரொளி நாட்டம் கொண்டது..

பேரொளியும், திருவொளியும்

ஒன்றையொன்று சந்திக்கப்

பெருவிருப்பம் கொண்டதால்,

ஏழு வானங்களும் பிளந்தன.

௦௦

விண்ணவர் தலைவர் ஜிபுரீல்

விண்ணக ஆணை ஏற்றுக்

கண்மணியை அழைத்துவரக்

கையில் ‘புராக்’குடன்

கடிதில் வந்தார்...

௦௦

கண்மணி ரசூலே,

கதிரொளி வதனமே...

முன்னவன் ஒளி முதலோன்

தங்களை அழைத்துவர

விண்ணக வாகனமிதைத்

தந்தென்னைப் பணித்தான்

ஏந்தலரே..ஏறுக இதில்....என்றார்

௦௦

ஒளியை ஏற்றிச்செல்ல

ஒரு நிபந்தனை சொன்னது புராக்,

‘’எந்தலரே, எம்பெருமானே,

திவ்விய நாயனின் திருச் சந்நிதிக்கு

கொண்டு சேர்க்கிறேன் தங்களை

மறுமையில் எனக்காக நீங்கள்

மன்றாட வேண்டுமென்றது.’’

௦௦

புன்னகை புரிந்த பூமான் நபி

சம்மதம் சொல்லிப் புராக்கில் ஏற-

விண்ணகம் விரைந்தது விண்வாகனம்.

தன் பார்வை எட்டும் அளவில்

முன்கால் வைத்துப் பாய்ந்தது..

௦௦

முதலாம் வானத்தின்

முத்துக் கதவுகள் திறக்க-

முதலாம் மனிதரின் முகதரிசனம்...

ஆதம் நபி எங்கள்

மனுக்குலத்தின் அடிநாதம்,

முன்வந்து, முகமன் கூறி

முசாபாஹ் செய்த பின்னர்-

௦௦

இரண்டாம் வானத்தின்

இரத்தினக் கபாடங்கள் திறந்தன...

ஈசன் ஈங்கு உடலுடன் உயர்த்திய

ஈஸா நபிகள் வந்தெதிர்கொண்டு

இதயச் செம்மல் நபிகள்பிரானை

இகபரம் போற்றி வாழ்த்தினர்--

௦௦

மூன்றாம் வானத்தின்

முத்துக் கதவுகள் திறந்தன

முத்து முகம்மதர் ரசூல்தம்மை

முதல்வன் படைத்த

மோகவெழில் முகவெழில் ததும்பும்

முழுமதி யூசுப் நபியழகர்

முன்வந்து முகமன் கூறினரே

௦௦

நான்காம் வானத்தின்

நட்சத்திரக் கதவுகள் திறந்தன..

நட்சத்திரக் கணக்கின்

நற்பலன்கள் நன்கறிந்த

நன்னிறவண்ணர்

நபி இத்ரீஸ் அன்னவர்கள்

நபிகள் பிரானுக்கு

நல்வரவுரைத்தனர்..

௦௦

ஐந்தாம் வானத்தின்

ஐம்பெரும் கதவுகளும்,

அடுத்தடுத்து விலக-

ஐம்பொன் நிறத்தினர்

ஐம்புலன் வென்றவர்

ஐங்குனர்நபி ஹாரூன்அலை

அண்ணல் எங்கள் கோமானை

ஐயரி கூறி மகிழ்ந்தனர்-

௦௦

ஆறாம் வானத்தில்

ஆரும் காணா வழியொன்று

அன்று திறந்தது..

அஸாவாலடித்து நதி பிளந்த

ஆற்றல்மிக்க மூஸா நபிகள்

ஆருயிராம் எம்பெருமானை

ஆரத்தழுவிக் கொண்டனரே..-

௦௦

ஏழாம் வானத்தில்

எவருக்கும் திறக்காத

திரையன்று விலக- மகனுக்காக

ஏழகம் அறுத்துப் பலியிட்ட

எம் தந்தை இபுராஹீம்நபி வந்து-

ஏந்தல் எம் பெருமானை

எதிர் கொண்டழைத்தனர்..

௦௦

ஏழுவானிலும்

ஏழு தூதரைச் சந்தித்த கதையை

ஏழுகடல் மை கொண்டெழுதிய போதும்

எடுத்துரைக்க எவராலும் இயலாத போது,

௦௦

திவ்வியப் பேரொளியின்

முன்னிலை அமர்ந்து

தரிசனம் பெற்றுத்

தன்னிலை அறிந்த

தாஹா ரஸூலின்

தகைமை அறிவார் யாருளர்...? அதன்

தன்மை சொல்ல எவருளர்...?

௦௦

அற்புத மிஹ்ராஜ் என்னும்

ஆன்மிகப் பயணத்தின்

அகமியம் கூற ஆரால் முடியும்...?

விண்ணேற்றத்தின் இரகசியம் எதுவோ..?

விண்ணேகும் மகா சக்தி இதுவோ..

அல்ஹம்துலில்லாஹ்..

என்று சொல்வதன்றி

‘வேறொன்றறியேன் பராபரமே’...௦