Friday, August 18, 2023

புனித பரித்தியாகத்தின் விலை இந்த உயிர்.

புனித பரித்தியாகத்தின் விலை இந்த உயிர்.

 

 

 

அந்த உயிர் நீங்கியதோ

அந்த உயிர் நீங்கியதோ...

 

ஒரு சொட்டும் மாசுபடாமல்

சுட்டும் சுடர் விழியில் மின்னிய அந்த உயிர்...

 

உலகத்துக்கு உயிர் தந்த  உயிரின் உயிர் அது.

தியாகத்துக்கு தீ வைத்து ஒரு

தீச்சுடரை ஏற்றி வைத்த அந்த புனிதப் பூ உயிர் நீங்கியதோ...

 

கர்பலாவின் கண்களில்

கண்ணீர்க் கோடுகள் வரைந்த பின்

தன் பாட்டனாரைச் சந்திக்கப்   புறப்பட்டதோ...

 

இரத்தம் குடித்த வாளின் கூர் முனையில்

ஒரு காவியம் எழுதி உலகுக்குத் தந்து சென்றதுவோ..

 

புனித அன்னையின் பூமடி தவழ்ந்து

புண்ணியம் சுமந்த அந்த உயிர்....

ஒப்பற்ற வீரத்தின் மாசற்ற மனிதரின்  தோளில் சுமந்த அந்த

சோபன உயிர்  சொல்லாமல் போனதுமேன்.....

அதனை அழைக்க சொர்க்கத்துக்கு ஏனிந்த அவசரமோ....

 

கண்மணி நபிகளின் கரம் பிடித்து நடந்த அந்தக்

கம்பீர உயிர், களத்தில் கழுத்துக் கொடுத்த பின்,

காற்றில்  ஒரு கவிதை எழுதிக் கலந்ததுவோ...

 

இல்லை..

ஒரு போதும் இல்லை.

 

அந்தப் பரிசுத்த உயிர் வாழ்கிறது

ஆம், அந்தப் பரிசுத்த உயிர் வாழ்கிறது

 

ஒவ்வொரு முஸ்லிமின் நாடி நரம்புகளிலும் ஊடுருவி

அந்த உயிர் வாழ்கிறது..

 

உலகத்தின் முடிவு வரைக்கும்

உள்ளார்ந்து வழிநடத்தும்

அந்த ஆத்மாவின் சக்திதான் என்ன...

 

அது  அந்தக் கர்பலாவுக்கு சொன்ன செய்திதான்  என்ன...

 

தியாகம் என்ற தீயில் இறங்கி வருக..

தியாகம் என்ற தீயில் இறங்கி வருக..

 

உண்மை என்ற தடாகம் அருகே

உமக்காக காத்திருப்பேன்

 

என்றுரைத்த அந்த

அந்த உயிரின் உயிராய் ஆகிட உணர்வுகள் துடித்திட

அந்தப் புனித உயிரைப் போற்றிப் பணிகின்றோம்.

அந்தப் புனித உயிரைப் போற்றிப் பணிகின்றோம்.

 

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்

 

0

 

 

 

கவி வரிகள்--- தீரன். ஆர்.எம். நௌஷாத்

அனுசரணை- ‘கவிமணி பௌஸ்தீன்


Thursday, August 17, 2023

தகிப்பு

 தகிப்பு

ooooooo


கொழுத்துற வெயிலில்

கண்களும் இருளுது  

வடிகிற வியர்வையில்

உடலமும் உருகுது 


அடிக்கிற அனலில்

அகிலமும் சுருளுது 

 நடக்கிற போதினில்

கால்களும் தீய்க்குது


எரிக்கிற கதிரவன் 

ஏறியும் வருகுது

தகிக்கிற தகிப்பினில்

தொண்டையும் வரளுது


சுடுகிற சூரியன்

உச்சியில் காயுது

நரகத்தின் வெம்மை

நினைவினில் தாவுது 

0

தீரன்

உயிருதிர் காலம்

 உயிருதிர் காலம்

--------------------------


உயிர் விருட்சத்திலிருந்து

ஒவ்வோர் கணமும்

உதிரும் இலைகளில்

உன் பெயர் உண்டா..


துளிரில் விழுவதும்

சருகாய் சறுகுவதும்

இடையில் உதிர்வதுவும்


எந்த இலைக்கு

எந்தக் கணத்தில்

எழுதப்படும் 

அந்தக்கணக்கு..


விதிக் காற்று

வீசியடிக்க

எகிறிடும் இலைகளில்...


எந்தன் இலையே

என்று வீழ்வாய்..?

O

✍️ தீரன்..

விதி

 விதி 


விழியில் எழுதி

விதியில் வைத்ததும் 

தாளில் எழுதித் 

தலையில் வைத்ததும்..


உளியால் செதுக்கி

ஊழியில் வைத்து

வலிகள் தந்ததும்..


தலைச் சுழியில்

தொடங்கி

தலை விதிக்குத்

தலைப்பிட்டதும்..


எழுதுகோல் எடுத்து 

எழுத்தெல்லாம் நடத்தும் 

விசித்திர விதிக்கு

இந்த விதியை 

விதித்தது...


விதியின்

தலைவிதியோ?

0

தீரன்....

மாயத் தூரிகை

 மாயத் தூரிகை 

===========


அம்புலிக் குவளையில் 

அழகொளி குழைத்து

அடர் வனம் வரைந்து..


ஆழக் கடலும்

அலைகளும்

அள்ளித் தெளித்து 


பாலைத் தகிப்பில் 

கானல்நீர்

பாயச் செய்து,


இன்னும்,

வான் வெளியில்

வெள்ளிப் புள்ளிகள் வைத்து 


பிரபஞ்சத் திரையில்

தானே வரைந்து

தானே இரசிக்கும் 


அந்த

மாய ஓவியன்

எறிந்த தூரிகை 

எங்கே..?

0

தீரன்.

ஏகமானாய்

 ஏகமானாய்..

-----------------


மானானாய்

மான் வாழும் கானானாய்

மீனானாய் 

மீன் நீந்தும் நீரானாய் 

தேனானாய்

தேன் தரும் பூவானாய்


வானானாய்

வானில் நீந்தும் நிலவானாய் 

தாயானாய் 

தரணியில் அன்பின் ஊற்றானாய்..

ஊனானாய்

உயிர்கள் உறையும் உடலானாய்..


இன்னுமின்னும்,

ஆணானாய் பெண்ணானாய் 

நானானாய் நீயானாய்

இவை எல்லாம்

ஏனானாய்..

என்னிறைவா...

O

தீரன்..