Monday, March 18, 2024

புதிய வரம்- &- ஆகாயத் தொழுகை

 

 புதிய வரம்

 கந்தர்வ இசை மீட்டுகிறேன்

காது கொடுக்க யாருமிலர்

 

கண்கவர் ஓவியம் தீட்டுகிறேன்

கண்ணெடுத்துப் பார்ப்போர் யார்..

 

ஆகாயம் அள்ளித் தருகிறேன்

ஆருடைய கைகள்

அள்ளிக் கொள்ளும்?

 

தங்கப்புதையல் தருகிறேன்

தாங்குவது யாரின் கைகள்..

 

அட்சய பாத்திரத்தையும் அளிக்கிறேன்

அடைந்து கொள்ள

ஆர் தகுதி பெறுவார்..

 

என்

வெறும் கைகளை

விரும்பி வருபவருக்கு

வரம் தருகிறேன்..

வருக..

O

 

ஆகாயத் தொழுகை

 

கருமுகில்கள் கொண்டுவரும்

நீரில் ஒழுச் செய்து,

 

சந்திரத் தொப்பி அணிந்து

வான முசல்லாவை

உதறி விரித்து

வணங்குவது யாரோ?

 

இந்த

நட்சத்திரத்

தஸ்பீஹ் மணிகளை

உருட்டித் துதி செய்வதுவும்

பிரபஞ்சமெல்லாம்

இடியாய் முழங்கும்

இந்த

திக்ரை ஒலிப்பதுவும் யார்

 

பளிச்சிடும் மின்னலின்

வெளிச்சம் கொழுத்தி

புனித மறை

ஓதுவது யாரின் குரலோ..

 

மேக ஊதுபத்திப் புகை

வான மஸ்ஜித் எங்கணும்

பரவி மணக்கிறது..

O

 

 

No comments:

Post a Comment