Tuesday, February 3, 2026

அலைதல்

 அலைதல்

========
அலைகளே,
அசையாதீர்கள்
அமைதி கொள்ளுங்கள்..
பாய்வதை
நிறுத்திக் கொள்ளுங்கள்
ஆணவம் கொண்டு
ஆடாதீர்கள்
நுரைப்பல் காட்டிச்
சிரிக்காதீர்கள்
கரையேறி வந்து
கரைச்சல் தராதீர்கள்
ஆணலை பெண்ணலை என்ற
ஆடலை நிறுத்துங்கள்
ஊருக்குள் உரச வரும்
ஊடலையும் விடுங்கள்
தலைக்கனம் கொண்டு,
தரையுடன் மோதும் உங்கள்
தலைகளைத் தணியுங்கள்
கணப்பொழுதில்
கடலுக்குள் கரைந்து
காணாமல் போகும் உங்களுக்கு
இத்தனை கர்வம் ஏன்..
பேரின்பக் கடலுக்குள் மூழ்கி
ஞான முத்தெடுக்கும்
நிலை இதுவோ..
நிறுத்திக் கொள்ளுங்கள்
நிதானம் பெறுங்கள்
O

நிலையாமை

 

நிலையாமை

 

எத்தனை கோடி

நீர்க் குமிழிகள்

 

இந்த

ஏகப் பெரும் சமுத்திரத்தில்

 

வினாடியில் வெடிப்பவை

நிமிடத்தில் நிலையற்றுப்

போனவை...

 

அற்ப வாழ்வில்

அழகுற வாழ்ந்து மடிந்தவை

சரித்திரம் படைத்து விட்டு

சமுத்திரத்தில் மறைந்தவை

 

வெடித்துச் சிதறும்

வேளை அறியாமல்

வனப்புடன் வாழ்பவை

 

எத்தனை எத்தனை கோடி

நீர்க் குமிழிகள் இந்த

ஏகப் பெரும் சமுத்திரத்தில்

ஆதம் நபியின் காதல் கணக்கு

 

ஆதம் நபியின் காதல் கணக்கு

 

ஆதம் நபியின்

காதல் கணக்கில், எத்தனை

வீதம் மீதம்

இருக்கிறது உன்னிடம்..

 

வேதம் சொன்ன காதலில்

ஒரு வீதம் ஆவது

எஞ்சி இருக்கிறதா

 

மாதம் முழுவதும்

வணங்கிய போதும்

இறை நாதம்

காதில் கேட்கிறதா..

 

ஓதும் நேரம்

மனம் ஒன்றாமல்,

ஏதும் புரிகிறதா..

 

சூதும், வாதும்

சேர்ந்திருக்கையில்

ஒரு போதும்

அந்த நாதம்

கேட்பதற்கில்லை.. போ..

0

காலங் கொத்திப் பறவை

 

காலங் கொத்திப் பறவை

 

என் காதலைக்

கௌவிப் பறந்த

காலங் கொத்திப் பறவையே,

 

ஒன்றை தெரிந்து கொள்..

எத்தித் திருடிச் சென்று

என் காதலைக்

கொத்தித் தின்ற

பாவத்தால்,

 

ஒவ்வொன்றாக உன்

சிறகுகள் உதிர்ந்து

மொட்டைக் காலம் ஆகி

நீ காலமாகி

விட்ட போதிலும்

 

என்

காதல் தந்த

நினைவுகள் அழியாது

என்னுடன் வாழ்ந்திருக்கும்

என்பதறியாய் நீ..

 

ஓ.. காலங் கொத்திப் பறவையே..

O

 

பாதயாத்திரை

 

பாதயாத்திரை

 

எத்தனை காலடிகள்

எடுத்து வைத்த பாதவடிகள்

 

எண்ணி நடக்கவில்லை

எண்ணியும் நடக்கவில்லை

 

பாவப் பாதையில்

பயணித்தவை எத்தனை

 

பள்ளிவாசலுக்கு சென்றவை

எத்தனை..

 

கடந்த காலத்தை

நடந்து கழித்தவையும்

தப்படி வைத்துத்

தடம் பதித்தவையும்

 

எண்ணி நடக்கவில்லை

எண்ணியும் நடக்கவில்லை

 

பயணம் முடிந்தது

பாதையும் முடிந்தது

 

பாதங்களின்றி வந்து

படுத்திருக்கிறேன்

பாவம், என்

பாதம்...

O

 

மண்மகள்

 

மண்மகள்

 

சந்திக்க வருவேன்

ஒரு தினம் உன்னை..

 

துணை யாருமின்றித்

தனியாக..

தயாராக நீ இருப்பாய்

 

படுத்துக் கிடப்பேன்

உன் மடிமீது

எடுத்து அணைப்பாய்

உன் மண் மேனி தழுவி..

 

அழுத்தி மூடும் உன்

கரத்தின் வெம்மையும்,

கொழுத்தி எரியும் உன்

இதழின் முத்தமும்

யாருக்கும் தெரியாது..

 

நெருக்கி அணைக்கும்

உன் நெஞ்சின் வேகம்

என் எலும்புகளை

முறிக்கும் என்பதும் அறியார்.

 

ஆ.,

நீ ஓர் அடக்கமான

பெண் அல்ல..

நான் அடக்கமான மண்.

O

மன்மத வண்டு

 

மன்மத வண்டு

 

ஓ., பொன்வண்டே,

எத்தனை சோலைகள்

கடந்து வந்தாய்

 

எத்தனை மலர்களில்

நடந்து வந்தாய்..

 

நீ தொட்டு வந்த மலர்களில்

தேன் சுரந்ததெத்தனை..

நீ பட்டு வந்த பூக்களில்

தேன் பருகாது

விட்டு வைத்ததெத்தனை?

 

உன் கட்டுடலில்

அவற்றின் மகரந்தங்கள்

பட்டுத்,

தம் கற்பினை இழந்த

கதைகள் அறிவாயோ?

 

அவை

கண்ணீரில் எழுதிய

கவிதைகள் புரிவாயோ?

 

ச்சே,

விட்டு விடு இந்த வேலையை

ஓரிதழில்

மட்டும் பருகி வாழுதல்

ஒண்ணாதோ உனக்கு?

O