Monday, April 25, 2022

சம்மாந்துறை எங்கள் தாயகம்....! சம்மாந்துறை எங்கள் தாயுமே...!.."

 

<<<<< கவியரங்கம் >>>>>>

" சம்மாந்துறை எங்கள் தாயகம்....! 
சம்மாந்துறை எங்கள் தாயுமே...!.."

31.12.2017 ஞாயிறு மு.ப. 9.00

கவி உரைப்போர்...:::

1. பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ்.

2. கலாபூஷணம், கலைமணி ஏ.சி. இஸ்மாலெப்பை

3. சாமசிறீ கவிதாயினி மஷூரா சுஹுர்தீன்.

4. கவிஞர். அலியார் டீ.ஒ.

5. கவிஞர் இஸ்மா பரீத்

விருந்தினர் கவிஞர்....
கவிஞர் தீரன் ஆர்.எம். நௌசாத்

முன்னிலை:
மர்ஹூம் எம்.ஏ. அப்துல் மஜீத் விருது பெற்ற-
அல்ஹாஜ் ஐ.ஏ. ஜப்பார்

கவி மழையில் நனைந்திட 
<<
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் >>

ஏற்பாட்டுப் பணியில்---

-- அபு நஜாத் பௌசுதீன்

 

 

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

குன்னென்ற சொல்லால்

குவலயங்கள் படைத்தளித்தானே ..வல்லவன்

எல்லாமுமாய்  காட்சி தரும்  அவன் திருக் காட்சியை   

என்னென்பேன் அவன் பெரும் மாட்சியை...

அவன் புகழ் ஓதுவோம் ...

௦௦

மேலும்

ரஹ்மத்துல் லில் ஆலமீன் எங்கள் கண்மணி ரசூலுல்லாஹ்அன்னவர்கள் மீதில் சலாமும் சலவாத்தும் சொல்கிறேன்...

௦௦

தங்கத் தலைமகன் சிங்கக் குலமகன்

எம் எ அப்துல் மஜீதென்னும்

அழகன் ..அவன் ஆண்ட

சம்மாந்துறை மண்ணில்

சந்தக் கவிதை பாட வந்தேன்

சொந்தக் கவிதைதான்...சொற்பிழைகள் இருப்பின்

சம்பந்தக்கார ஊரார் நீங்கள்

சற்றுப் பிழை பொறுக்க வேண்டுகிறேன்

௦௦  

சங்கப் புலவர் வழிவந்த இன்பத்தமிழ்த் தோன்றலாம்

தங்கத் தலைவர் அவர்கட்கும்

அன்னவர் முன்னால்

எடுத்துச் சில பாட்டு

தொடுத்துக் கோர்த்து,,அடுத்தடுத்துப் பாட வந்த

அன்புத் தோழமைகள் அனைவருக்கும்///

 

பார்த்து ரசித்துப் பாட்டு ருசிக்க

சேர்த்து வந்த சபையோரே அனைவருக்கும் –

சாந்தி சமாதானம் ...நிலவுக ...

0

இங்கு சபையிலும் கூட

சந்தக் கவிஞரும் அந்தக் கவிஞரும் இந்தக் கவிஞரும்

என்- சொந்தகாரக்க் கவிஞரும் உள்ளார்கள்..

ரெண்டொரு பந்தக் கவிஞரும் பதுங்கி இருக்கின்றார்..

எந்தக் கொம்பர் இருந்தால் எனக்கென்ன .. எனக்கென்ன.

நான் தீரன்.. கவிகளில்  சூரன்..

கதைகளில் வீரன்...சாய்ந்தமரு  தூரன்.

ஒரு  கவிதை தாரன்..... சுவைத்துப்  பாரன் ...

௦௦

சம்மாந்துறை எங்கள் தாயகம்....!

சம்மாந்துறை எங்கள் தாயுமே...!.."

-----------------------------------------------தீரன் .ஆர்.எம். நௌஷாத்

 

சம்மாந்துறை உங்களின் தாய்தான்

சும்மா சொல்லக் கூடாது

சம்மாந்துறை எங்கள் தாயுமே...

௦௦..

’கரையுடைத்து கடல் பொங்கித்

தரை கடந்து தாவி வர

துறை கடந்து விரைந்தேகிய

சாய்ந்தமருது மக்களை 

அரவணைத்து ஆதரித்த சம்மாநதுறை

எங்கள் தாயும்தான்...

௦௦

தண்ணீர் துரத்திய எங்களின்

கண்ணீர் துடைத்த

சம்மாந்துறை

எங்கள் தாயும்தான்.

௦௦

கடல் விழுங்கிய எங்கள்

உடல்களை மார்பில் அடக்கிய

சம்மாந்துறை

எங்களுக்கும்  தாய்தான்.

௦௦

சமுத்திரம் விரட்டிய எங்களுக்கு

சத்திரம் தந்து தங்க வைத்து

சரித்திரம் படைத்த  

சம்மாந்துறை

எங்களின் தாயும்தான்

௦௦   

 

அகதியாய் ஓடிவந்த  எங்களுக்கு

உஹது மலையென

அடைக்கலம் தந்த சம்மாந்துறை

எங்கள் தாயுமே..

௦௦

பீடைச் சுனாமி வந்து

எங்கள் பிடவையை பறித்த போது

ஆடை தந்து மானம் காத்த

சம்மாந்துறை

எங்கள் தாயும்தான்....

௦௦

வீறு கொண்டு

அலைகள் விரட்டிய போது

சோறு தந்து பசி தீர்த்த

சம்மாந்துறை

எங்களுக்கும் தாயன்றோ..?....

௦௦

ஆழிப் பேரலை எங்களை

அள்ளிச் சுருட்டிய போது

வாழி  என வரவேற்ற 

சம்மாந்துறை

எங்களுக்கும் தாய்தான்

௦௦

உருண்ட அலைகள்

உச்சாரத்தில் உசந்து வந்த போது

மிரண்டு ஓடி வந்த எம்மை

திரண்டு வந்து உதவி செய்த

சம்மாந்துறைத் தாயல்லவா..?

௦௦

 

 

தாக்கிய அலைகளின் சுழிகளில்

சிக்கித் தவித்த நேரம்

ஆக்கிய உணவுடன் ஓடி வந்த

சம்மாந்துறை

எங்களுக்கும் தாய்தான்  

௦௦

ஆழித் தாயே எங்களை

அழித்த போது

வந்தெம்மை 

வாழ்வித்தாயே அம்மா எங்கள்

சம்மாந்துறைத தாயே..உனக்கு

என்ன கைம்மாறு நாம் செய்ய...?

என்ன கைம்மாறு நாம் செய்ய...?

௦௦

மிக்க நன்றிகள் சபையோரே...

வஸ்ஸலாம் .....

000

No comments:

Post a Comment