Friday, May 13, 2022

யாஹூ-5

 


முற்றும்
∞∞∞∞∞

விடிந்து விட்டது
இனி
விளக்கை அணை.

ஒடிந்து விட்டது
ஒட்டுவதற்கில்லை,
ஜீவநீர்,
வடிந்து விட்டது
விழியை மூடு.

இடிந்து விட்டது
இணக்க முடியாது..
நிரந்தரமாய்ப் 
படிந்து விட்டது
பறக்க இயலாது

மடிந்து விட்டது
மண்ணைப் போடு-இடுப்
பொடிந்து விட்டது
இருகை ஏந்து 

எல்லாம்,
முடிந்து விட்டது
மூட்டையைக்  கட்டு..
0
✍️தீரன்
ஒடுங்கியிருத்தல்..
∞∞∞∞∞∞∞∞∞∞∞∞
பறந்து விடாதே
என் பட்டாம்பூச்சியே..
உள்ளங்கையில்
நீ எழுதும் ஒரு கவிதை..
எனக்குச் சில
உண்மைகளை சொல்கிறதே..
அற்பப்
புழுவாக இருந்தாய்
கூட்டுக்குள்ளே சிலகாலம்
ஆன்மத் தவமிருந்தாய்
வர்ண வரம் பெற்று
வெளிவந்து சிறகடித்தாய்
இழி பிறவி நானும்
இருட் குகையில் போயிருந்து,
இறைதுதித்தொருநாளில்,
வர்ணச் சிறகுகள் பெறுவேன்
வந்துன்
வாசலில் வட்டமடிப்பேன்..
0
✍️தீரன்..


திருக்கோலம்
-----------
வானில் பறந்ததெல்லாம்
சும்மா
வீணில் பறந்ததுவா..
கானில் காண்பதெல்லாம்
கணத்தில்
காணாமல் போவதும்தான்
தூணிலும் துரும்பிலும்
ஆணிலும் பெண்ணிலும்
மறைந்தொரு நாடகம் நானிலத்தில் நாடுவதுமேன்..
ஏனிந்தக் கோலம்
எடுத்தாடும் திருக்கோலம்...
தன்னில் தனக்காய்த்
தானாடும் தன்மையுமேனோ..
அருளன்பு கனிந்தருளத்
தானிந்தக் கூத்தெல்லாம்..
O
✍️தீரன்..\

படிமுறை
................
முறைப்படி
ஏணிப்படி ஏறாமல்
ஏனிப்படி ஆனேன்.?
படிப்படியாய் ஏறியிருப்பின்
உருப்படியாய்
ஏறும்படி இருந்திருக்கும்
படிதாண்டித்
தப்படி வைக்கப்
படி தவறித்
தவறும்படி ஆனதெப்படி..
இப்படி இந்த
விதிப்படி செல்லாது,
செப்படி வித்தைச்
செல்படியாகுமோ..
நல்லபடி சொன்ன
சொற்படி ஏறாதிப்படி
விழும்படி ஆயிற்று..
இனி
எப்படி ஏற...?
O
✍️தீரன்

இரவின் விடுதலை
°°°°°°°°°°°°°°°°°°°°°°
எந்த ரொட்டியில்
யாருடைய பெயரோ..
ஆன்ம விருட்சத்திலிருந்து
ஆருடைய சருகு
உதிருமோ
ஆருடைய ஓலை
துளிர்த்தெழுமோ..
உன்னுடைய அரிசி
உண்டு முடியுமோ
அவனுடைய அர்ஷில்
அடைக்கலம் கிடைக்குமோ
மண்ணுக்கு வருவதும்
விண்ணுக்குப் போவதும்
எழுதித் தீர்க்கும்
இந்த இரவில்,
எனக்காக
போட்ட ரொட்டி
பிளந்து விடுமோ...?
0
✍️ தீரன்..

No comments:

Post a Comment