Monday, November 4, 2024

உயிர்த்தல்

 உயிர்த்தல்


காலம் கௌவிக் கொண்டு வந்து
காலடியில் போட்ட
கவிதை இது.
குற்றுயிராய்க் கிடக்கிறது
குனிந்து தூக்குகிறேன்.
செதுக்கிச் செப்பம் செய்து
சிறகுகளும் சேர்க்கிறேன்.
தமிழ் உளியால்
விழி திறந்து
ஆன்மாவை அதற்குள்
ஆழமாய் ஊதுகின்றேன்..
ஆஹா,
அற்புதப் படைப்பாய்
அந்தரத்தில் சிறகடித்து
அது பறக்கின்றது.
அந்த அழகில்
உயிர்க்கின்றேன்..
O

மாதவம்

 மாதவம்

கவிதைகள் வற்றிய
குளத்தில்
யாருக்காக தவமிருக்கிறேன்..
பறவைகள் பறக்காத வானத்தில்
ஏனோ வலை விரிக்கின்றேன்
துண்டு நிலாவை முறித்து
வானம் முழுவதும்
வரைந்த வசனங்கள் வாடுகின்றன
வரவில்லை நீ.
என்றாவது வந்து
வாசிப்பாய் என்று
கவிதையைப் போர்த்திக்
கண்ணுறங்குகின்றேன்
வா..வா
வந்து
என்னைக் கொத்திக் கொண்டு செல்..
o
தீரன் 2024


Monday, September 30, 2024

பாவ வண்டி

 பாவ வண்டி

 

எத்தனை காலமாய்

இழுத்து வருகிறேன்

மேடு பள்ளம்

குன்று குழி

ஏறி இறங்கி...

 

பாவி ஊர்ந்து வருகிறேன்

பரமன் வாசலுக்கு

இந்தப் பார வண்டியுடன்.

எத்தனை மூட்டைகள்

எந்தன் முதுகில்..

 

பாவப் பாரம் அழுந்தி

பாதி மடங்கிய உடம்புடன்

ருக்கூவில் குனிகிறேன்..

 

சுமையை இறக்கிச்

சுகம் பெறச்

சுஜூதில் விழுகிறேன்

 

யா.. ஒபூருள் வதூத்!

0

 


முதுசொம்

 

முதுசொம்

 

நல்லதொரு மரம் இது

மகளே..

 

முறித்து முழுவதையும்

எறிந்து விடாதே,

முற்றத்தில் நிழல் தந்து

முதுமையில் வாழ்கிறது

 

தறித்து விடாதே மகளே

விலங்குகளும் பறவைகளும்

தரித்து நின்ற தங்குமடம்..

வெறுத்து விடாதே மகளே,

 

வெகு காலம் உன்னை

வளர்த்த விருட்ஷம் அதை.

கரித்தும் விடாதே கண்ணே,

கண்போல உன்னைக்

காத்த கற்பகம்..

மரித்த பின்னும்

மனதில் வாழும் மந்திரம்.

 

பிறப்பிலும் இறப்பிலும்

உனக்காக வாழும்

உன்னத ஜீவன் அது

 

உனக்கு

உயிர் ஊற்றிய அதற்கு

நீ நீரூற்று...

O

 

அடங்க மறு

 

 அடங்க மறு

 

சிரம் பணிக...

கட்டளை பிறக்க-

 

நான் நெருப்பு

மண்ணுக்குப்

பணிய மாட்டேன்

நான் உயரம் நோக்கி

எழுந்து எரிபவன்

 

மண்,

தாழ்ந்து கிடக்கும் வஸ்து

என் சிரம் பணிவது

ஒருவனுக்கே அன்றி

மண்ணுக்கு அல்ல..

 

குதர்க்கம் புரிந்து

சாபம் பெற்று,

விரட்டப்பட்டு வீழ்ந்தது.

வாழ்நாள் முழுவதும்

வரம் பெற்று வாழ்கிறது.

 

அடங்க மறுத்தலின்

அதி ரகசியம்

ஆரறிவர்?

0

 

 

 

Monday, July 8, 2024

நாலுமணிப்பூ

 

நாலுமணிப்பூ
-------------

சின்ன மலரே
எந்தன் வாசலில் மலர்ந்த
வண்ண மலரே

என்ன மலரோ
உனக்கு என்ன பெயரோ
வாசல் முழுவதும் நீ
வாசம் வீசுகிறாய்

நாலுமணிப் பூவோ நீ
நாலு பேரும் இரசிப்பதனால்
மேனியெல்லாம் கூனி
நாணி நிற்கிறாயோ..

வனப்பெல்லாம் சில நாளில்
வாடி விடலாம் - அந்த
நினைப்பெல்லாம்
ஏது உனக்கு?
கர்வம் கொண்டு நீ
காற்றினிலே ஆடுகிறாய்

சின்னஞ்சிறு வாழ்க்கை
இதில்
பென்னம் பெரிய
எண்ணம் உனக்கு.

விரைவில்,
நீ வாடி உதிர்தல் கூடும்
அந்த இடத்தில்,
இன்னொரு பூவும் வரலாம்.

பயணம் நிச்சயம்
புறப்படத் தயாராகு,
என் வண்ணச் சிறு பூவே...
0
தீரன்


Monday, March 18, 2024

புதிய வரம்- &- ஆகாயத் தொழுகை

 

 புதிய வரம்

 கந்தர்வ இசை மீட்டுகிறேன்

காது கொடுக்க யாருமிலர்

 

கண்கவர் ஓவியம் தீட்டுகிறேன்

கண்ணெடுத்துப் பார்ப்போர் யார்..

 

ஆகாயம் அள்ளித் தருகிறேன்

ஆருடைய கைகள்

அள்ளிக் கொள்ளும்?

 

தங்கப்புதையல் தருகிறேன்

தாங்குவது யாரின் கைகள்..

 

அட்சய பாத்திரத்தையும் அளிக்கிறேன்

அடைந்து கொள்ள

ஆர் தகுதி பெறுவார்..

 

என்

வெறும் கைகளை

விரும்பி வருபவருக்கு

வரம் தருகிறேன்..

வருக..

O

 

ஆகாயத் தொழுகை

 

கருமுகில்கள் கொண்டுவரும்

நீரில் ஒழுச் செய்து,

 

சந்திரத் தொப்பி அணிந்து

வான முசல்லாவை

உதறி விரித்து

வணங்குவது யாரோ?

 

இந்த

நட்சத்திரத்

தஸ்பீஹ் மணிகளை

உருட்டித் துதி செய்வதுவும்

பிரபஞ்சமெல்லாம்

இடியாய் முழங்கும்

இந்த

திக்ரை ஒலிப்பதுவும் யார்

 

பளிச்சிடும் மின்னலின்

வெளிச்சம் கொழுத்தி

புனித மறை

ஓதுவது யாரின் குரலோ..

 

மேக ஊதுபத்திப் புகை

வான மஸ்ஜித் எங்கணும்

பரவி மணக்கிறது..

O

 

 

Wednesday, February 7, 2024

மேய்ச்சல் வெளி

 

மேய்ச்சல் வெளி

 

என்னுடைய கழுதைகள்

எங்கெல்லாமோ

மேய்ச்சலுக்குச் செல்கின்றன..

பிரபஞ்சம் முழுக்க

அலைகின்றன..

பிடித்தமானதை சப்பிச் சப்பி

அசை போடுகின்றன

கசப்பானதைக்

கடித்துக்

கடிதில் துப்பி விடுகின்றன..

இவற்றை

அடக்கி வைப்பது

ஆகப் பெரும் கஷ்டம்

ஆயிரமாயிரமாய்

குட்டியீன்று பெருகிச்

செல்லும்

இந்த

நினைவுப் பெரும் கழுதைகள்..

O

 

நேரலை

 

நேரலை

 

நேத்திரத்தில் நீர் வழிய

நேரலையில் பார்க்கின்றாய்,

நீ..

கண்ணாக வளர்த்த

வாப்பாவின்

கண்கள் மூடியிருப்பதை

உன்னைக் நீராட்டியவரின்

உடலை

யாரோ குளிப்பாட்டுவதை

தூக்கி வளர்த்தவரின்

ஜனாசாவை, யாரோ

தூக்கிச் சந்தூக்கில் வைப்பதை

தோளில் உன்னைச் சுமந்தவரை

யாரோ

தம், தோளில் சுமந்து செல்வதை..

நெஞ்சோடு அணைத்திருந்தவரின்

மஞ்சிப் பலகையை..

இன்னும்

மீசான் கட்டைகளையும்..

யாரோ வெட்டிய குளிக்குள்

அவரை இறக்கி வைப்பதை

யார் யாரோ

மண் எறிந்து மூடுவதை...

யாரோ ஒருத்தனைப் போல

நோர்வேயிலிருந்து,

நேரலையில்

பார்த்துக் கொண்டிருக்கிறாய்

அவர் மகன் நீ..

O